மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயத்தில் அரசமைப்பை மீறவில்லை - அமைச்சர் பவித்ரா
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயத்தில் நாம் எந்தவொரு இடத்திலும் அரசமைப்பை மீறவேயில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்துக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகள் உட்பட 9 மருத்துவமனைகளை மத்திய அரசு தனக்கு உரியதாக்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.
இந்த செயற்பாடு அரசமைப்பை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. குறித்த மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்.
நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே மாகாண மருத்துவமனைகளை பொறுப்பேற்றது.
ஆனால், மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிரணியினர் சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இது வெட்கக்கேடானது. முதலில் அவர்கள் நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்களைப் படித்துவிட்டு வாதங்களை முன்வைக்க வேண்டும்.
மாகாணசபை நிர்வாகத்தை நடத்த முடியாமல் ஆட்சிக்காலத்தை வீணாக்கிய வடக்கு தமிழ்
அரசியல்வாதிகள் தற்போது மத்திய அரசை நோக்கி கைவிரல் நீட்டுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.