போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தம்மை தீர்க்கதரிசி என்ற அழைத்துக்கொண்ட ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியபோது கைது செய்யப்படுவதைத் தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை இரத்து செய்யக்கோரி சட்டடமா அதிபர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேன்முறையீட்டு நீதிமன்றில் பாதுகாப்பாக வைக்கப்படுவதையும், அந்த ஆவணங்களை வேறு யாரும் அணுகக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துமாறும் நீதிமன்றத்தில் முன்னிலையாக மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேல்முறையீட்டை தொடர அனுமதி
இந்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ். துரைராஜா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்க, இந்த விடயம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெறத் தமது கட்சித் தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்
எனினும் இதற்கு சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான மூத்த அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை பரிசீலிக்காமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இதனை ஏற்க முடியாது என்று வாதிட்டார் இதனையடுத்து மேல்முறையீட்டைத் தொடர அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |