வெடிப்பு சம்பவங்களுக்கு மத்தியில் விற்பனைக்கு செல்லும் ”லிற்றோ” எரிவாயு நிறுவனம்?
இலங்கையில் எரிவாயு பாவனையை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய அண்மைய வெடிப்பு சம்பவங்களாக இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சந்தேகம் வெளியிடடுள்ளார்.
லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் சொத்துக்கள், மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் அதனை விற்பனை செய்வதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ, எரிவாயு கொள்கலன்களின் தேவையை குறைத்து அரசுக்கு சொந்தமான லிட்ரோ எரிவாயுவை விற்பனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.
எரிவாயுவைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம், அதனை கொள்வனவு செய்வோர், மின்சார அடுப்புகளுக்கு மாறுவார்கள். ஏனையோர் விறகுகளைப் பயன்படுத்துவார்கள்.
இதனால் லிட்ரோ எரிவாயுவின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். அதேநேரம் எரிவாயு இறக்குமதிக்கான செலவையும் அரசாங்கம் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்று பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
எனவே எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவங்களில் அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாக சந்தேகிப்பதாக பெர்னாண்டோ கூறினார்.