ஜப்பான் தூதுவர் விடுமுறையில்! இலங்கைக்கு நிதியை கொண்டு வருவதற்காக ஜப்பான் செல்லவில்லை!
கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைகளில் ஜேவிபியினர் தொடர்பு கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், அண்மை காலங்களில் பொதுமக்கள் மத்தியில் ஜேவிபியின் அரசியல் நன்மதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் வன்முறைகளை தூண்டிவிட்டு, ஜனநாயக விரோத செயல்களை மேற்கொள்வதற்கு ஜேவிபி, ஒருபோதும் துணியாது என்று அவர் குறிப்பிட்டார்.
வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்த, ஜேவிபி உறுப்பினர்கள் சிலர், கைதுசெய்யப்படவில்லை என்றும், அவர்கள், தமது வீடுகளில் தற்போதும் இருப்பதாகவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, விஜித ஹேரத்துக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க, பதவிக்கு வந்ததன் காரணமாக, ஜப்பான், அதிக உதவியை வழங்கப்போவதாகவும், இதற்காக ஜப்பானிய தூதுவர், ஜப்பான் சென்றுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தெரிவித்து வருகிறது.
எனினும் அவர் வருடாந்தம் வழங்கப்படும் நலன்புரி விடுமுறையில் ஜப்பான் சென்றுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
ரணில் பதவிக்கு வந்ததால், வெளிநாட்டு அரசாங்கங்கள், உதவிசெய்யும் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.
அவ்வாறு இருக்குமானால், ரணில் விக்கிரமசிங்க, ஆட்சியில் இருந்தபோது நாட்டை அபிவிருத்தி செய்திருக்கலாம் என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்