சபாநாயகரே அரசியல் பிரச்சினைக்கு காரணம்- எதிர்கட்சி குற்றச்சாட்டு! நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்!
மஹிந்தவுக்கும் லச்மனுக்கும் இடையில் வாக்குவாதம்
நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்லவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
நாடாளுமன்றின் நிதி சம்பந்தமான செயற்குழுவின் தலைவராக எதிர்கட்சி உறுப்பினர் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவின் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அரசியல் ரீதியாக செயற்பட்டு இந்த தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியின் அனுர பிரியதர்சன யாப்பாவை நியமித்ததாக லச்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

சபாநாயகரின் கருத்து
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத சபாநாயகர். இது குறித்து கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடமுடியும் என்று தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் குற்றச்சாட்டை முன்வைத்த லச்மன் கிரியெல்ல, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, வெலிகம பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் இணைப்பாளராக இன்னும் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இடம்பெற்றும் இன்னும் சபாநாயகர் பாடம் படிக்கவில்லை என்றும் லச்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது கேவலமான நிலையாகும். அத்துடன் அரசியல் பிரச்சினைகளுக்கு சபாநாயகரே காரணம் என்றும் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இதன்போது, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

அனுர பிரியதர்சன யாப்பா
இதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில், கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, தாம் ஆளும் கட்சியில் இருந்தபோது குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டபோதும், தற்போது எதிர்கட்சியில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

ஹர்ச டி சில்வா
எனினும் இதனை ஹர்ச டி சில்வா ஏற்றுக்கொள்ளவில்லை.
அனுர பிரியதர்சன யாப்பா, தற்போது எதிர்கட்சியில் இருக்கின்றபோதும், அவர் ஆளும் கட்சியின் மூலம் நாடாளுமன்றுக்கு வந்தவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
