கோட்டாவின் கைதியான ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யவேண்டும்! நாடாளுமன்றில் சாணக்கியன் கோரிக்கை (Video)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கோட்டாபய ராஜபக்சவின் சிறைக்கைதியாக மாறியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர்,இன்று நாட்டு மக்களுக்காக அல்லாமல், ராஜபக்சர்களை பாதுகாக்கும் செயற்திட்டத்தையே முன்னெடுத்துச் செல்கிறார்.
இதன் ஒரு கட்டமாக எந்த நிபந்தனையும் இன்றி பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டமை காரணமாக, காலிமுகத்திடல் உட்பட்ட நாட்டு மக்களின் கோரிக்கையான கோட்டா விலகிச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு துரோகம் இழைத்துள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் வருவதற்கு அவர் இடம்தேடிக்கொடுத்துள்ளார்.
தமது கட்டுப்பாட்டிலேயே இன்னும் பொதுஜன பெரமுன கட்சி இருக்கிறது என்பதை பசில் ராஜபக்ச நிரூபிப்பதற்கு கடந்த பிரதிசபாநாயகர் தெரிவின்போது இடமளித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் காலிமுகத்திடல் போராட்டத்தை இல்லாதொழிக்கும் வகையில் அவர் செயற்படுகிறார்.
குறித்த போராட்டம் தொடர்பில் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஏன் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிச்செல்வதற்காக குழு ஒன்றை அமைக்கவில்லை என்று சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
போராட்டங்கள் காரணமாக கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிச்செல்ல தயராக இருந்தபோது, தமக்கு பிரதமர் பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக ரணில் விக்கிரமசிங்க எந்த நிபந்தனையுமின்றி, அந்த பதவியை பொறுப்பேற்றதன் மூலம், அவர் மக்களின் போராட்டங்களை காட்டிக்கொடுத்துள்ளார்.
இதன்போது அவர் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்கான காலத்தை கோரும் நிபந்தனையையாவது முன்வைத்திருக்கலாம்.
எனினும் அதனை அவர் செய்யவில்லை. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கப்போவதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க, இன்று 113 பேரின் ஆதரவை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை அரசாங்கத்துக்குள் கொண்டு வரும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.
நாடு இன்று இருக்கும் நிலையில், குறிப்பிட்ட அமைச்சர்களை மாத்திரம் நியமித்திருக்கமுடியும்.
எனினும் 113 எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க, தேவையற்ற அமைச்சுகளை உருவாக்கியுள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ராஜபக்சர்களை காப்பாற்றுவதற்காக கைதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் பொசன் தினத்துக்கு முன்னதாக விடுதலை செய்யவேண்டும் என்று சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.