ஐக்கிய மக்கள் சக்திக்கு 8 அமைச்சுக்கள்: 15 நாட்களில் சர்வகட்சி அரசாங்கம்
எதிர் காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசங்கம் முன்மொழிந்துள்ளது என தெரியவந்துள்ளது.
அடுத்த 15 நாட்களில் சர்வகட்சி அரசு அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்தரப்பினருக்கும் அமைச்சு பதவி
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பதவியேற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 18 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
இந்த அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறிய இருவர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏனைய ஆளும் தரப்பு மற்றும் எதிர்த் தரப்பில் உள்ள கட்சிகள், குழுக்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன்படி அவற்றுடன் இன்று முதல் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறி
அரசங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்கும் நோக்குடன் இரகசியப் பேச்சுக்களில்
ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.