பொது நலனுக்கு பதிலளிக்க வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை: ப்ரைடே போரம்
தற்போதைய யதார்த்தத்தை புரிந்துகொண்டும் ஏற்றுக்கொண்டும் பொது நலனுக்குப் பதிலளிக்க வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்று ப்ரைடே போரம் (Friday Forum) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஏனெனில், அவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் தங்கள் வாக்கு மூலமே ஆட்சி மாற்றத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியும். அத்துடன் சர்வகட்சி குறுகிய கால இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும்.
கோட்டாபயவுடன் தொடர்பில்லாத புதிய ஜனாதிபதி தெரிவு
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்பில்லாத ஒரு புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இத்தகைய ஜனாதிபதியை தெரிவு செய்வது மிக அவசியமாகும்.
எனவே, பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர், மக்களால் நம்பப்படும் ஒரு புதிய ஜனாதிபதியும், சர்வகட்சி அரசாங்கமும் குறுகிய இடைக்காலத்திற்கு பதவியில் அமர்த்தப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயநலம் இலங்கையை தோல்வியடைய செய்யும்
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல், பல்வேறு சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தின் கைகளில் ஆட்சியை வழங்குவது மற்றும் பொருளாதார மீட்சியின் அடித்தளமான அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கான கடைசி வாய்ப்பாகும்.
எனவே, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சுயநலத்துடன் எதிர்கால நோக்கமின்றி வாக்களிப்பதன் மூலம் இலங்கை நாட்டைத் தோல்வியடையவே செய்ய முடியும்” என தெரிவித்துள்ளது.