இவ்வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் நடத்தப்படும் நாடாளுமன்ற அமர்வு!
நாட்டில் தற்போது நிலவி வரும் கோவிட் தொற்று அச்சம் காரணமாக நாடாளுமன்ற அமர்வு இந்த வாரம் ஒரு நாள் மட்டும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை பத்து மணிக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் அமர்வானது மாலை 4.30 மணி வரையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காதும், மதியபோசனத்துக்காக சபை நடவடிக்கைகளை இடைநிறுத்தாதும் தொடர்ந்தும் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளை ஒரு நாளைக்கும் மட்டும் வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க குறிப்பிடுகையில், அமர்வின் போது முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நிதி முகாமைத்துவப் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டளை) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வினை நேரலையாக தமிழ் மொழியில் தமிழ்வின் இணையத்தளத் செய்தி ஊடாகவும், லங்காசிறி முகப்புத்தகம் மற்றும் யூடியுப் வாயிலாகவும் பார்வையிட முடியும்.