உயிரிழந்த சிறுமி தொடர்பில் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து: நாமல் மற்றும் மனோ கடும் எதிர்ப்பு
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாத விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அரசியல் அழுத்தம் இல்லாத விசாரணை நடத்தப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ், உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய அழைத்த போது அவர்கள் முன்வரவில்லை என தெரிவித்தார்.
உரிய விசாரணைகள்
மேலும், குறித்த மாணவி மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அமைச்சர் சரோஜினி போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, உரையாற்றிய மனோ கணேசன், குழந்தையை இழந்த பெற்றோர் தங்களை வந்து சந்திக்கவில்லை என அமைச்சர் கூறுவது ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டார்.
மாறாக, அமைச்சின் அதிகாரிகளை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி மன அழுத்தத்தில் உள்ள பெற்றோரை சந்திக்குமாறு அவர் கோரினார். அத்துடன், மாணவியை மன நோயாளி என சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தான் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்த விடயங்களை மாத்திரமே கூறியதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இது தொடர்பில் தான் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் கலந்துரையாடியதாகவும் உரிய விசாரணைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மீண்டும் பேசிய மனோ கணேசன், சிறுமி கடந்த ஆண்டில் ஆசிரியரால் பாதிக்கப்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன்னர் தனியார் வகுப்பு ஒன்றின் நிறுவனாரால் அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் அவமானப்படுத்தப்பட்டமையே சிறுமி தவறான முடிவெடுக்க காரணம் எனவும் குறிப்பிட்டார்.
சிறுமியின் மன நலம்
குறித்த தனியார் கல்வி நிறுவனர், உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டதாகவும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரசார மேடைகளில் நாம் பேசவில்லை எனவும் அரசாங்கம் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
இதனையடுத்து, உரிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நாளை காலை பெற்றோர் எங்களை சந்திப்பார்கள் எனவும் சரோஜினி போல்ராஜ் கூறினார்.
இதனையடுத்து உரையாற்றிய, நாமல் ராஜபக்ச, பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் மன நலம் குறித்து எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் என வினவினார்.
சிறுமியின் மரணத்திற்கு தாமதிக்காது நீதியை பெற்றுத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
