சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ்! ரஞ்சன் வெளியிடப் போகும் தகவல்கள்
சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
குறித்த பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க, சிறையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க முன் வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சாட்சியம் பெறப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தெரிவித்தது.
இந்த சாட்சியத்தை, சத்தியக் கடதாசியாக தனது சட்டத்தரனி ஊடாக சமர்ப்பிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக அந்த ஆணைக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் சத்தியக் கடதாசி சாட்சியம் கிடைத்த பின்னர் அதில் உள்ளடக்கப்படும் விடயங்கள் மீதும் விசாரணையாளர்கள் அவதானம் செலுத்துவர் என அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தற்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரிடம் மட்டுமே வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
திருக்குமார் நடேசனின் வங்கி நடவடிக்கைகள் தொடர்பில் உள்நாட்டு தனியார் மற்றும் அரச வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் தேசிய இறைவரி திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்வதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தகவல்கள் தெரிவித்தன.
பண்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வெளியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.
அதன்படியே விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 2021 ஒக்டோபர் 6 ஆம் திகதி ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க விதானகேவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸில் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியமை குறிப்பிடத்தக்கது.