கொழும்பு துறைமுக நகரில் சீனாவின் காலனியை உருவாக்க திட்டம்! பஞ்ஞாலோக்க தேரர்
கொழும்பு துறைமுக நகரில் சீனாவின் காலனியை உருவாக்கும் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளவே அரசாங்கம் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததாக சிங்களே தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லும் காலத்தை 7 நாட்களாக குறைத்து, புத்தாண்டு காலத்தில் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து அரசாங்கம் செய்த மோசடியின் பின்னணியில் மிகப் பெரிய சதித்திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,19வது திருத்தச் சட்டத்தில் இருந்த மிகவும் சிறந்த சாதகமான விடயங்களை மீறி, 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் நேரத்தில் அரசாங்கம் அதில் அவசர சட்டமூலங்களை நிறைவேற்று ஷரத்தை உள்ளடக்கி இருந்தது.
அவற்றுக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை 14 நாட்களாக இருந்ததுடன் அதனை 7 நாட்களாக குறைத்தது.
19வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக 20 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் போது எம்.சீ.சீ உடன்படிக்கையை நாட்டில் அமுல்படுத்துவதற்காக உதவும் சட்டம் என்றே நாட்டில் உள்ள அனைத்து தேசிய சக்திகளும் கூறின.
எனினும் எம்.சீ.சீ உடன்படிக்கையை காட்டி, சீன காலனி அல்லது துறைமுக நகரத்தை கேந்திரமாக கொண்டு பொருளாதார ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது என்பது மிகவும் தெளிவானது எனவும் பஞ்ஞாலோக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.