யாழில் அழிக்கப்படும் பனை மரங்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பனைமரங்கள் பல இலட்சக் கணக்கில் யுத்தத்தில் 2009 வரை அழிக்கப்பட்டிருந்த நிலையில், யுத்தம் முடிவுக்கு பின்னர் தென்னிலங்கை மற்றும் உள்ளூர் வாசிகளால் செல்வாக்கை பயன்படுத்தி மரங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காணிகளை பாதுகாத்தல் மற்றும் விவசாய நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்வாறு பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
யுத்தத்திற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட பனை மரங்கள் அதிகளவு யுத்தத்திற்கு பின்னர் அழிக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கில் இருந்து தொடர்ச்சியாக பனைகள் அழிக்கப்பட்டு பனை மரங்கள் சட்டவிரோதமாக ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தொடர்ச்சியாக சட்டவிரோத பனை அழிப்பு இடம்பெற்று வரும் நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், பனைமரத்தில் இருந்து கைத் தொழில் முயற்சியாளர்கள் உட்பட பாமர மக்கள் அதிகளவு பயன் பெறுகின்றனர். இப்படியொரு நிலையில், பனை மரங்கள் அதிகளவு அழிக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை, மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.