வழக்கு தள்ளுபடி: வலிகாமம் வடக்கு தவிசாளருக்கு பொலிஸார் அச்சுறுத்தல்
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட நீதிமன்றத்திற்கு வெளியே தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதையை விடுவித்தால் உங்களை கைது செய்வோம் என நீதிமன்றத்தில் வழக்குக்கு முன்னிலையான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வெளியே தவிசாளர் சுகிர்தனை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் விடுக்க நடவடிக்கை
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்று நேற்றைய தினம் தள்ளுபடி செய்து தவிசாளரையும் சபை செயலாளரையும் வழக்கில் இருந்து முற்றாக விடுத்திருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

நீதிமன்றத்திற்கு வெளியே தான் அச்சறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக தவிசாளர் சோ.சுகிர்தனால் எழுத்து மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.