7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் காலம் கடத்தும் தந்திரம்! - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்
“சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி குடியரசுத் தலைவருக்கே இதற்கான அதிகாரம் உண்டு என்று கூறியிருப்பது அப்பட்டமான காலம் கடத்தும் தந்திரமாகும்” என தமிழர் தேசிய முன்னணியி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், “7 பேர் விடுதலைப் பிரச்சினையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து காலம் கடத்தும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அவரது செயல்பாடு அரசியல் சட்ட மாண்பினை மதிக்காத போக்காகும். சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை ஏற்றுச் செயல்படவேண்டியது மட்டுமே ஆளுநரின் கடமை என அரசியல் சட்டம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதைச் சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
ஆனாலும், கடந்த இரண்டாண்டு காலமாக அதை மதியாத போக்கில் நடந்து கொண்ட ஆளுநர், இப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி குடியரசுத் தலைவருக்கே இதற்கான அதிகாரம் உண்டு என்று கூறியிருப்பது அப்பட்டமான காலம் கடத்தும் தந்திரமாகும்.
அமைச்சரவையின் பரிந்துரை அனுப்பப்பட்டவுடனேயே இவ்வாறு அவர் கூறியிருக்கலாம். ஆனால், இரண்டு ஆண்டுகள் எதுவுமே கூறாமல் இப்போது குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று கூறியிருப்பது, கேலிக்கூத்தாகும்.
எனவே, உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் தலையிட்டு ஆளுநரின் தவறான போக்கினை கண்டிக்க முன்வர வேண்டும்.
இல்லையேல் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும் அரசியல் சட்ட மாண்பினை மதியாத போக்கில் நடந்து கொள்ள முற்படுவார்கள் என்பதைச்சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
