நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், அரிசி ஆலை உரிமையாளர்கள்,,பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் ,கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 2,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு
இருப்பினும், மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நியாயமான விலையில் விற்பனை செய்ய அரசாங்கத்தால் மீண்டும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாவட்டத்தில் உள்ள தனியார் சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கலந்துரையாடலில், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் 3 நெல் ஆலை உரிமையாளர்களும், தனியார் தரப்பில் 8 நெல் ஆலை உரிமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் ஊடாக விரைவாக நெல் கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், ஒவ்வொரு நெல் ஆலை உரிமையாளருக்கும் 25 மில்லியன் ரூபாய் கடன் நிதியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் வசமுள்ள நெல் கொள்வனவு செய்யப்படும்.
இதன் மூலம் மேலும் சுமார் 10,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகள் சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. என தெரிவித்தார்.