இலங்கையிலிருந்து திரும்பிச் சென்ற அமெரிக்க சுற்றுலாப் பயணி: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமங்களுக்கு உள்ளாகி, மீண்டும் திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த இந்த அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் தனது முகவர் நிறுவனத்துடன் தொடர்புகொள்ள முடியாத காரணம் ஆகியவற்றால், 5 மணி நேரத்திற்கு பின்னர் திரும்பிச் சென்றுள்ளார்.
குறித்த அமெரிக்க சுற்றுலாப் பயணி இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தி, அறிக்கையை வழங்குமாறு, பிரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.