அரசிடம் பிரதான எதிர்க்கட்சி விடுத்துள்ள வேண்டுகோள்!
இயற்கைப் பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கையை மீட்பதற்குச் சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளருமான் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
தற்காலிக அதிகாரம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையானது நாட்டு மக்களுக்குச் சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக அதிகாரமே வழங்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு போதுமானளவு அனுபவம் இல்லை. எனவே, அனுபவம் உள்ளவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்பதற்கு தயாராக வேண்டும்.
இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துமாறு கோருகின்றோம். இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்கும்."என தெரிவித்துள்ளார்.