வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க தயாராகி வரும் எதிர்க்கட்சிகள்
எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்து அவசரமான தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சியின் பல பிரதான கட்சிகள் இரகசியமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் போராட்டகாரர்களுடனும் பேச்சுவார்த்தை
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் போராட்டகாரர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அண்மையில் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசைகளில் அமர்ந்துள்ளனர்.
அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை குறைக்க தயாராகி வரும் சுயாதீன உறுப்பினர்கள்
மிக விரைவில் நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை குறைக்க போவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் சமய வழிப்பாட்டு தலங்களின் மின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அடுத்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.