பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
நாட்டில் தொடரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி 'பி' வலயத்தில் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும், கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
நெற்பயிர்கள் சேதம்
இதற்கிடையில், ஊவா பரணகமவின் கஹடதலாவ பகுதியில் உள்ள தோட்ட வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக தோட்ட குடியிருப்பு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதுருஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.