ட்ரம்பின் சுங்க வரி தாக்குதலுக்கு பதிலடி: ஒன்ராறியோ அரசு எடுத்த அதிரடி தீர்மானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்து வரும் சுங்க வரி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒன்ராறியோ மாகாணம் மற்றும் அதன் வணிகங்கள், தொழிலாளர்கள் மீதான அவரது நியாயமற்ற தாக்குதல்களுக்கு முதலமைச்சர் டக் ஃபோர்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாதிக்கப்பட்டுள்ள வணிகங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பளம், குத்தகை மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உதவும் வகையில், ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான “ஒன்ராறியோ பாதுகாப்பு நிதித் திட்டத்தின்” தகுதியை ஒன்ராறியோ அரசு விரிவுபடுத்தியுள்ளது.
30 பில்லியன் டொலர்
வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது, வணிகங்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் மாகாணத்தின் நீண்டகால பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 30 பில்லியன் டொலர் பெறுமதியான பரந்த சுங்க வரி நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிதித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆண்டுதோறும் சராசரியாக 30 பில்லியன் டொலர் பெறுமதியான பொதுத்துறை கொள்முதலைப் பயன்படுத்தி, ஒன்ராறியோ மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு முதலமைச்சர் டக் ஃபோர்ட் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“எங்கள் அரசாங்கம் ஒன்ராறியோ தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் சம்பளத்தை உறுதி செய்யவும், வரி செலுத்துவோரின் பணம் எமது மாகாணத்தை இயக்கும் வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சாத்தியமான அனைத்து வழிகளையும் தொடர்ந்து பயன்படுத்தும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்கார்பரோ மற்றும் ஒன்ராறியோ முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கைகள் உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், அதிகரித்து வரும் செலவுகளை எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும், பொதுமக்களின் பணம் அதிகளவில் மாகாணப் பொருளாதாரத்திற்குள்ளேயே புழங்குவதை உறுதி செய்யவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Buy Ontario” சட்டத்தின் அடிப்படையில், ஒன்ராறியோவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதுடன், முடிந்தவரை கனேடிய வணிகங்களுக்கு ஆதரவளிக்குமாறும் பொதுமக்களை அந்நாட்டு அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.
மோசடியில் ஈடுபடும் மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள்..! ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri