பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகள் மாத்திரமே சிறையில்! இராஜாங்க அமைச்சர் தகவல்
அரசு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களைச் சிறையில் அடைத்து வருகின்றது எனச் சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருக்கின்றனர் என்று நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளைப் பெற்றுக்கொள்வதற்குச் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல.
போதைப்பொருள் குற்றவாளிகளால் பாரிய சிக்கல்
சந்தேகநபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28 ஆயிரத்து 468 சிறைக்கைதிகள் இருக்கின்றனர்.
சிறைக்கைதிகளில் 50.3% சதவீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்துக்காகத் தண்டனை பெற்றவர்கள். அவர்களாலேயே சிறைச்சாலைகளில் தற்போது பாரிய சிக்கல் காணப்படுகின்றது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்குவது மாத்திரம் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. இவர்களுக்கு திறன் விருத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் புனர்வாழ்வளிப்பது அவசியமாகும்.
இடவசதி பற்றாக்குறை
இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதும் மீண்டும் அதே தவறைச் செய்வதைத் தடுக்க முடியும்.
சிறைக்கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்று ஒரு சிலர் குற்றஞ்சாட்டினாலும் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்க மாத்திரம் அரசு 3.9 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டு வருகின்றது.
2021 - 2022 காலப் பகுதியிலும் கூட இதற்கான நிதியை அரசு ஒதுக்கி இருந்தது.
சிறைச்சாலைகளில் 13 ஆயிரம் சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29 ஆயிரம் கைதிகள் இருப்பது பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
அதற்காக திறைசேரியில் இருந்து பாரியளவு நிதி சிறைச்சாலைகளுக்கு வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு அவசியமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றுகின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







