இணையவழி பணப்பரிமாற்றம் மூலம் மோசடியில் ஈடுபட்ட இளம் தம்பதியினர் கைது
மட்டுக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில் போலியான ஆப்மூலம் இணையவழி பணப்பரிமாற்றம் ஊடாக பல இலச்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவையைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஆகிய இருவரை நேற்று (3) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள்
வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பல கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு கணவன் மனைவி ஜோடியாக சென்று பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்துகொண்டு அதற்கான பணத்தை தமது போலியான கையடக்க தொலைபேசி ஆப் மூலம் விற்பனை நிலையத்துக்கு பணபரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக காட்டிவிட்டு கையடக்க தொலைபேசியை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கையடக்க தொலைபேசி நிலையத்தின் வங்கிகணக்கில் உண்மையில் பணப்பரிமாற்றம் இடம்பெறவில்லை. இது போலியான பணபரிமாற்றம் என கண்டறிந்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பொலன்னறுவை கட்டின்வில பிரதேசத்தைச் சேர்ந்த 26,21 வயதுடைய இளம் கணவன் மனைவி ஆகிய இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்வர்கள் மோசடியாக கொள்வனவு செய்த தொலைபேசிகளை பொலன்னறுவை கல்வல பிரதேசத்திலுள்ள அவர்களது உறவினர் கையடக்க தொலைபேசி நிற்பனை நிலையத்துக்கு வழங்கிவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில் பல இலச்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதேவேளை கல்முனை மூதூர் பிரதேசங்களில் இருந்தும் தொலைபேசி ஊடாக பலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையின்
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.