ஒரே நபரின் அதிகார ஆசை மனிதகுலத்துக்கு வேதனையாக மாறியுள்ளது - கார்டினல் மெல்கம் ரஞ்சித்
இன்றைய உலகில் அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், ஒரே நபரின் உலகை ஆட்சி செய்யும் ஆசை காரணமாக மனிதகுலம் முழுவதும் துன்பத்திற்குள்ளாகியுள்ளது என்றும் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு திருநாளை முன்னிட்டு நடைபெற்ற முக்கிய திருப்பலியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உலக அமைதிக்காக சிறப்பாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த காலகட்டத்தில் நாம் உலக அமைதிக்காக பிரார்த்திக்க வேண்டும் எனவும் ஒரே மனிதனின் சுயநலத்தினாலும், உலகை ஆட்சி செய்யும் ஆசையினாலும் மனிதகுலம் பெரும் வேதனையை எதிர்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த மனிதனின் மனம் மாறி, இந்த தவறான பாதையிலிருந்து விலக வேண்டும் என நாம் பிரார்த்திக்க வேண்டும் என கோரியுள்ளார்.
கிறிஸ்தவம் என்பது வெறும் ஜெபிப்பதோ, பைபிளைப் படிப்பதோ மட்டும் அல்ல எனவும் அது அன்பும், சேவையும் கொண்ட வாழ்க்கை முறையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு செலுத்துவது, சேவகராக இருப்பது, கடவுளின் முன்னிலும் அயலானின் முன்னிலும் நேர்மையாக வாழ்வது ஆகியவற்றை அது கற்பிக்கிறது என தெரிவித்துள்ளார்.
தலைவன் சேவகராக இருக்க வேண்டும் எனக் கற்பிக்கப்படுகின்றது எனவும் ஆனால் இன்றைய உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல் அதிகாரத்தை மட்டுமே நாடுகின்றனர்” என கார்டினல் குறிப்பிட்டுள்ளார்.