மன்னார் மாவட்டத்தில் 'ஓமிக்ரோன்' திரிவு வைரஸ் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை (VIDEO)
வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலும் 'ஓமிக்ரோன்' திரிவு வைரஸ் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை (1) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓமிக்ரோன்' திரிவு வைரஸ் இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதற்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வடமாகாணத்தில் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் பீ.சி.ஆர். மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) மேலும் புதிதாக 15 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 2 கோவிட் மரணங்களும் நிகழ்ந்துள்ளது.
நவம்பர் மாதம் 25 டெங்கு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நவம்பர் மாதம் 540 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 2916 தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 2933 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 5 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 2 தொற்றாளர்கள் நேற்றைய (30) உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 28 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
கடந்த மாதம் உயிரிழந்த ஐவரில் இருவர் எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை.
மற்றைய இருவர் இரண்டாவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கழிந்துள்ளதாக காணப்படுகின்றது.
மேலும் 60 வயதிற்கு மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கழிந்திருந்தால் அவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வாரம் நிறைவடையும்.
எனவே 60 வயதிற்கு மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கழிந்திருந்தால் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்குச் சென்று பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு தற்போது வரை மொத்தமாக 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 டெங்கு தொற்றாளர்கள் கடந்த நவம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் பனங்கட்டுகொட்டு, எமில் நகர், சின்னக்கடை, மூர்வீதி, பேசாலை 8 ஆம் வட்டாரம் போன்ற பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதிகளில் டெங்கு தொற்று அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே மக்கள் நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதோடு, நுளம்பின் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.
காய்ச்சல் ஏற்படும் போது சுய சிகிச்சைகளை செய்து கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அல்லது வைத்தியர்களிடம் சென்று தமது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு, குருதி பெருக்கு நோய் அறிகுறி உடைய இருவரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலை தனிப்பதற்காக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொது மக்கள் எம்.எஸ்.ஏ.ஐ.டி என்ற வகையைச் சேர்ந்த மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சுய சிகிச்சையை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அல்லது வைத்தியர்களிடம் சென்று தமது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது சர்வதேச அளவில் கரிசனையை செலுத்தி உள்ள 'ஓமிக்ரோன்' என்கிற வகை திரிவுடைய வைரஸ் இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதற்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக வடமாகாணத்தில் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் பீ.சி.ஆர்.மாதிரிகள் எதிர் வரும் மாதத்தில் சேகரிக்கப்பட்டு ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
டிசெம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் சந்தர்ப்பம் உள்ளது.
எனவே பொதுமக்கள் ஒன்று கூடும் நிலமைகளை தவிர்த்து சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.