ஓமந்தை - வேப்பங்குளம் பகுதியில் வீடு உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு
வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றினை திருடிச்சென்றுள்ளனர்.
மாலை நேரம் வீட்டு உரிமையாளர் வீடு திரும்பிய சமயத்தில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததுடன், 1000 ரூபா பணமும் வீட்டு வாயிலில் காணப்பட்டது.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்து பணமும், பெறுமதியான நகைகளும் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய
முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



