தவிசாளரின் நடவடிக்கையால் வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்
வவுனியா வடக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தவிசாளரின் செயற்பாடுகளால் அலுவலகத்தில் இருந்து வெளியேற முற்பட்ட நிலையில் உப தவிசாளரின் கோரிக்கைக்கு இணங்க அந்த செயற்பாட்டை கைவிட்டனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(1) இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தொடர்ச்சியாக நிர்வாக செயற்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதன் காரணமாக செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதுடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறுவதற்கும் தீர்மானித்திருந்தனர்.
பணிப்புறக்கணிப்பு
உத்தியோகத்தர்களுடன் கடும் தொனியில் செயற்பட்டு வருவதாகவும், ஆண் உத்தியோகத்தர்கள் முகச்சவரம் செய்ய வேண்டும், சப்பாத்து அணிய வேண்டும், போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதோடு களஞ்சிய காப்பாளர் களஞ்சியசாலைக்குள்ளேயே இருக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்ததோடு செயலாளருடனும் முரண்படுவதனாலுமே இந்நிலை தோன்றியுள்ளது.
இதன் காரணமாக இன்றைய தினம்செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இருந்தனர்.
அத்துடன் உயர் அதிகாரிகளிடம் முறையிட முனைப்பு எடுத்த போதிலும், உப தவிசாளர் வி.சஞ்சுதன் மற்றும் இரு ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களிடம் வினயமாக 5 நாள் அவகாசம் கேட்டதுடன் தாம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து உத்தியோகத்தர்கள் தமது செயற்பாட்டை கைவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



