கடமை தவறிய முக்கிய அதிகாரிகள்! பின்னணியில் திடீரென மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்
நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித்திருட்டு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும், இலங்கை மத்திய வங்கி தொடர்பாக நிதி அமைச்சகம் பல உண்மைக்குப்புறம்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு தொடர்பாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தின் அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதுடன் அவற்றில் ஒன்றில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.

மேலும், நிதி அமைச்சகத்தில் இருந்த அடிப்படை செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு பலவீனங்களின் காரணமாகவே, இணையவழி மோசடி குழு திரைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை திருடுவதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது என்றும் அறிக்கை குறிப்பிடுகின்றது.
நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டுக்கடன் செலுத்தும் செயல்முறையில் ஏற்பட்ட தோல்வியும் இந்த திருட்டுக்கு தேவையான பின்னணியை உருவாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சல் பாதுகாப்பு
இலங்கை மத்திய வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் கடன் பதிவேடுகளின்படி, பெறப்பட்ட செலுத்துகை அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்கும் மிக முக்கியமான கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அமைச்சக அதிகாரிகள், தத்தமது கடமைகளை முறையாக செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சலின் பாதுகாப்பை ஊடுருவல்காரர்களால் உடைக்க முடிந்ததாலும், அந்த கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்க தவறியதாலும் இந்த திருட்டு நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan