தாதியர்கள் பற்றாக்குறையால் ஏற்படப்போகும் பாதிப்பு!
அரச வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.அத்தோடு தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு இணங்காத சுகாதார அமைச்சர் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அரசாங்க தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
தாதியர்களின் பிரச்சினை
பொரல்லவிலுள்ள அரசாங்க தாதியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (10.02.2026) ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்,விடுமுறையில் வெளிநாட்டில் தாதியர் தொழிலைத் தொடரும் வாய்ப்பு இரத்துச் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக, ஐந்து ஆண்டுகள் சம்பளம் இல்லாத விடுமுறையில் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விடுமுறை வாய்ப்பு இரத்துச் செய்யப்பட்டதால் தாதியர்கள் இப்போது சேவையை கைவிட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுவதாகவும் ரத்னபிரியா கூறினார்.
தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின்படி, சுமார் 3,000 அரசு தாதியர் விடுமுறையில் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், மேலும் சுமார் 1,500 பேர் சேவையை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.