சபாநாயகரின் ஊழல் விசாரணைக்கு எதிராக சதி! முறைப்பாடு செய்த எதிர்க்கட்சி
சபாநாயகரின் பித்தியேக செயலாளருக்கு எதிராக இன்று (11.02.2026) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு செய்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், சபாநாயகரின் பிரத்தியேகச் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதம் மூலம் சில தகவல்களைப் பெற முயற்சித்ததாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
விசாரணைக்கு எதிராக சூழ்ச்சி
வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், சபாநாயகரின் பித்தியேக செயலாளர் கடந்த வாரம் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்த கடிதத்தை நான் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தினேன்.

சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடமிருந்து நான் அறிந்தேன்.
அது தொடர்பில் விசாரணைகள் நடைபெறும் நேரத்தில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் அத்தியாயம் 1 இன் பிரிவுகள் 125 மற்றும் 127 இன் கீழ் ஆணைக்குழு பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், விசாரணையில் தலையிடுவதாகவே நாம் கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.