ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
இலங்கை - தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அகதிகளாக இந்தியாவின் தனுஸ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
குறித்த நபர்கள் மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு (06.02.2024) அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டு கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள அகதிகளின் எண்ணிக்கை 293ஆக உயர்வடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனால் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து அதிகமானோர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இந்நிலையில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்கும் வேளைகளையும் அது குறித்த விசாரணைகளையும் மரைன் பொலிஸ் நிலையத்தில் நடத்தி வருகின்றனர்.
முகாமில் சேர்க்க நடவடிக்கை
அதேவேளை குறித்த குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
எனவே பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு ஐவரும் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும், கடந்த ஒரு வருடத்திற்குள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |