நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியில்.. அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
எமது நாட்டின் பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளன என்றும், முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசு தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சவால் விடுத்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும், கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகவும் விலைகளைக் குறிப்பிட்டுத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆட்சிக்கு வந்தன.
மின்சாரக் கட்டணம்
ஆனால், தற்போது எரிபொருள் விலையைப் பெருமளவில் உயர்த்தியுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை ஒரேடியாக 43 சதவீதத்தால் அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 140 பில்லியன் ரூபா இலாபமீட்டிய இலங்கை மின்சார சபை, தற்போதைய அரசின் மோசமான நிர்வாகத்தால் 38 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தங்களின் மூன்று நேர உணவில் ஒரு நேர உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசின் தவறான கொள்கைகளால் டொலரின் மதிப்பு சில மாதங்களுக்குள் 50 ரூபாவால் உயர்ந்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையால் நாட்டின் கடன் சுமை ஒரேடியாக 2 ஆயிரம் பில்லியன் ரூபாவா ல் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்கும்போது 93 பில்லியனாக இருந்த நாட்டின் கடன் சுமை, தற்போது எவ்வித அபிவிருத்தியுமின்றி 107 ஆக அதிகரித்துள்ளது.