மூதூரில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு வெளியான அறிவித்தலை மறுக்கும் மூதூர் பிரதேச செயலகம்
மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து பிரதேச செயலகமும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயத்தை மூதூர் பிரதேச செயலகம் மறுத்துள்ளது.
தமது செயலக உத்தியோகத்தர்கள் எவரும் கோவிட் தொற்று உள்ளதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், தமது செயலகத்தில் பொது மக்கள் சேவை மாத்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலகம் திறக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் வர்த்தக நிலையங்களை மூடுமாறு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்தல் விடுத்துள்ளார்.
மறு அறிவித்தல் வரும்வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இத்தீர்மானங்களுக்கு பொதுமக்கள் பரிபூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்தோடு மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து பிரதேச செயலகமும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்குவரும் வகையில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
- அனைத்து மதஸ்தலங்களும் உடனடியாக மூடப்படும். அத்துடன் வீடுகளில் கூட்டாக நடத்தப்படும் அனைத்து வணக்க வழிபாடுக்கும் தடை.
- அத்தியவசிய தேவைகளுடைய மருந்தகங்கள், மளிகை பொருட்கள் வர்த்தக நிலைங்கள், மீன் மற்றும் இறைச்சிக்கடை, மரக்கறிக்கடைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்படும். அவ்வாறு திறக்கப்படும் கடைகள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மீறுபவர்களது கடைகளும் உடனடியாக மூடப்படும்.
- வீடுகளில் மேற்கொள்ளப்படும் வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் இது கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- வெளியூர்களுக்கு செல்வதற்கு முற்றாக தடை, அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதியினைப் பெற்றுச் செல்ல முடியும்.
- அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் 50 வீதமானோர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
- அத்தியவசிய தேவைகளுக்கான அலுவலகங்கள் தவிர மற்றைய அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு பொது அறிவித்தல் ஒன்றினை மூதுார் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.