அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது சுற்றுச் சூழலைக் கவனத்திலெடுக்க வேண்டும்
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது சுற்றுச் சூழலைக் கவனத்திலெடுக்காமல் செயற்படமுடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்தே அதனைச் செயற்படுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலமே எதிர்கால சந்தத்திக்கு வளமான சுற்றாடலைக் கையளிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் நாள் நிகழ்வு கைதடி சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10.06.2025) நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர்
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில்,
“நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் இவ்வாறான சர்வதேச சுற்றுச்சூழல் தினம் எதுவும் இருக்கவில்லை. இன்று எல்லாவற்றுக்கும் தினம் கடைப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
எதன் ஒன்றின் தேவை உணரப்படுகின்றதோ அதற்கு இன்று நாள்களை கடைப்பிடிக்கின்றோம். அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம் எழுந்துள்ளமையால் அதற்கும் சர்வதேச நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
நாம் மீண்டும் சில விடயங்களில் பழைமைக்கு திரும்புவது சூழலை பாதுகாக்கும் என்று கருதுகின்றோம். அன்றைய நாள்களில் 'சொப்பின்பை' என்று எதுவுமில்லை.
சிறப்பானதொரு ஆற்றுகை
ஆனால் இன்று எங்கும் எதிலும் 'சொப்பின்பை'. அதை இலகுவாகவும் இலவசமாகவும் பெற முடிகின்றது. அன்றைய நாள்களில் சிமெந்துதாள்களில் செய்த 'மரத்தாள்பை' பயன்படுத்தப்பட்டது. இன்று வெளிநாடுகளில் 'சொப்பின்பை' பணத்துக்கே கொடுக்கின்றார்கள்.
அதைப்போன்று இங்கும் அதன் பாவனையை இறுக்கமாக்கவேண்டும். இன்றைய தினம் செம்முகம் ஆற்றுகைக் குழுவினர் மிகச் சிறப்பானதொரு ஆற்றுகையை வழங்கினார்கள்.
சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் அவர்களின் ஆற்றுகை அமைந்திருந்தது. பெரியவர்கள் எதைச் செய்கின்றார்களோ அதைப்பார்தே சிறுவர்கள் பழகுகின்றார்கள். அவர்கள் சுற்றாடலை பாதிப்படையச் செய்கின்றார்கள் என்றால் பெரியவர்களாகிய எங்களின் செயற்பாடுகளே காரணம்” என கூறியுள்ளார்.




