அழிக்கப்படும் வடக்கு மாகாணக் கல்வி - சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி
வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடம்மாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) நடைபெற்ற அமர்வின் போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் “சேவையின் தேவை கருதிய இடமாற்றம்” என்ற பெயரில் கல்வி துறையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார்.
சேவையின் தேவை கருதிய இடமாற்றம்
மேலும் தெரிவிக்கையில், இடமாற்றங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களிலேயே மேற்கொள்ள முடியும்
1. வருடாந்த இடமாற்றம்
2. சேவையின் அவசிய தேவை (Exigencies of service)
3. ஒழுக்காற்று நடவடிக்கை ஆகிய தருணங்களிலேயே இடமாற்றம் மேற்கொள்ள முடியும்.
சேவையின் அவசிய தேவை (Exigencies of service) கருதிய இடமாற்றம் கீழ்வரும் மூன்று சந்தர்பங்களிலேயே மேற்கொள்ளப்பட முடியும்.
• ஒரு ஆசிரியரது தேவை மிக அவசரமாகத் தேவையடுமிடத்தில்
• குறித்த ஆசிரியரது சேவையே குறித்த பாடசாலைக்குத் தேவைப்படுமிடத்து
• ஓரு ஆசிரியரை குறித்த நிலையத்தில் வைத்திருப்பதால் அவரால் பிரச்சினை வளர்கிறது. என்னும் நிலை இம் மூன்று காரணம் இருந்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளால் ஆசிரியர் தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடலோ, அச்சங்கங்களின் பங்களிப்புகளோ இன்றி, பெருந்தொகை ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வி அதிகாரிகளால் 'சேவையின் தேவை கருதிய இடமாற்றம்' என்ற அடிப்படையில் 193 ஆசிரியர்களுக்கு ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் IIi பிரிவு 3.3 இன் பிரகாரம் “இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒன்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும் என்று 2013.07.03ம் திகதிய 1817/30 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 188 வது பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால் 25 ற்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டிருந்தன.
ஏற்கனவே வெளிமாவட்ட சேவைக்கு ஒத்த தீவகம், வடமாராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் பணியாற்றியோருக்கு இடமாற்றச் சபை கூட்டப்படாமல் சட்டவிரோதமான 2026 இல் தன்னிச்சையாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளிலிருந்து வடமாகாண கல்வி அதிகாரிகள் இன்னும் விடுவிக்கவில்லை.
சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனையும் அரசியல்தலையீடு, பாரபட்சங்கள், பழிவாங்கல் எண்ணம் கொண்ட வகையிலேயே வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, ஆசிரியர்களினதும், அவர்களை தங்கிவாழ்வோரதும் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சினிமா பாணியில் கொல்லப்பட்ட மூதாட்டி - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் - கொலையாளியின் கொடூரம்