வடக்கே கால்பதிக்க முனையும் சீனாவால் இந்திய பெருங்கடலில் அமைதி குலையும்
இலங்கைக்குள் சீனா செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கு என்பது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகின்றது. இது இலங்கைக்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மிக அண்மையில் இருக்கும் வடக்கு மாகாணத்திலும் தனது கால்களைப் பதிக்க சீனா முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் என்பது இலங்கையில் இந்தியப் பெருங்கடலிலும் ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோவிட் தாக்கத்திற்கு முன்னரே உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன. உலகத்தின் புதிய பொலிஸ் காரனாக சீனா தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது. அதேசமயம் அமெரிக்கா தான்தான் தொடர்ந்தும் பொலிஸ் காரனாக இருக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சிக்கின்றது.
சீனா தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தியும் மிரட்டியும் இயலக்கூடிய நாடுகளை கடன்கொடுத்து தனக்கு அடிமையாக்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றது.
அந்த வகையில் இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது. இலங்கைக்குள் சீனா செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கு என்பது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகின்றது. இது இலங்கைக்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையல்ல.
அது மாத்திரமல்லாமல் தமிழகத்திற்கு மிக அண்மையில் இருக்கக் கூடிய வடக்கு மாகாணத்திலுவும் தனது கால்களைப் பதிக்க சீனா முயற்சிக்கின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் என்பது இலங்கையிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தலாம்.
இதற்கு எந்த விதத்திலும் தமிழ் மக்கள் உடந்தையாக இருக்க முடியாது என்பதோடு தமிழ் மக்கள் அரசியல் அதிகார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தம்மை வலுவான சக்திகளாக மாற்றி கொழும்பில் தங்கியிருக்காமல் தமது சொந்தக்காலில் நிற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தமிழ் மக்களுக்கு தேவையானது. இந்த இடத்தில்தான் தமிழ் மக்களது பாதுகாப்பு, இந்தியாவின் பாதுகாப்பு போன்றவை ஒரு புள்ளியில் சந்திக்க முடியும்.
இவற்றை நிறைவேற்றுவதற்கு தமிழ் தலைமைகள் குறுகிய அரசியல் இலாபங்களை விடுத்து தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு ஓரணியில் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.