இலங்கை கடலில் உயிரிழப்பு குறித்து அசட்டுத்தனம் காட்டும் இந்திய அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கை கடலில் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்ற போதும் இந்திய அரசாங்கமும் அந்நாட்டு கடற்றொழிலாளர்களும் காது கொடுத்து கேட்பதாக இல்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) நேற்று (01.08.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைப்படகுகள் சீ.எப்.சிறிலங்கா என அழைக்கப்படும் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் சென்ற நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்ய முயன்ற போது துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் விடயங்களில் முக்கியமாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய வருகை உடன் நிறுத்தப்பட வேண்டும்.
இதனால் ஏற்படக்கூடிய பாரிய இழப்புக்கள், கைது நடவடிக்கைகள், கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பியல் சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
கடற்படை வீரர் உயிரிழப்பு
கடலிலே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுகின்ற பாதுகாப்பு தரப்பினர் அடிக்கடி கடலிலே கைது செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அண்மையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர் ஒருவரை கைது செய்ய முயன்ற போது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
அதே போன்றுதான் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எமது எல்லையினுல் அத்துமீறி வந்ததன் காரணமாக இப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பினுல் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களை சூறையாடுவதற்கும், கடல் வளங்கள் காவு கொள்ளபடுவதையும் தடுப்பதே கடற்படையினரின் கடமை. அதன் நிமித்தம் ஒருவரின் கைதின் போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாரிய போராட்டங்கள்
உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டிய விடயம். எனினும் எல்லை தாண்டி வருகின்ற விடயத்தை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதும் இந்திய அரசாங்கமும் சரி, அந்நாட்டு கடற்றொழிலாளர்களும் சரி காது கொடுத்து கேட்பதும் இல்லை. தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்பதற்காகவே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இனியாவது அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லை தாண்டி வருகின்ற போது இடம்பெறுகின்ற கைதுகள்,இவ்வாறான துன்பியல் நிகழ்வுகளை எதிர் காலத்தில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் சந்தித்து விட கூடாது என்பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவமானது தமிழக கடற்றொழிலாளர்களின் செயற் பாட்டினாலேயே நிகழ்ந்துள்ளது. இதற்காக அங்கே பாரிய அளவில் போராட்டங்கள் இடம் பெறுகின்றது.
இந்த போராட்டம் அவர்களின் உரிமை சார்ந்தது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தாலும் எமக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. அங்குள்ள பெண்கள் மற்றும் தாய்மாரின் அழு குரல்களை ஊடகங்கள் மூலம் காண்கின்றோம். வேதனையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறான சம்பவங்களை தடுக்க தொடர்ந்து நாங்கள் இந்திய கடற்றொழிலாளர்களை கலந்துரையாடலுக்கு அழைக்கின்றோம். பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி அதனூடாக ஒரு தீர்வை எட்டுவோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |