சமய சுதந்திரம் பெயரில் திணிப்பு தீவிரவாதம் - அருட்தந்தை மா. சத்திவேல் எச்சரிக்கை
சமய சுதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு சமய நம்பிக்கையையும் பலவந்தமாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்ற சமயத்தவர்களிடம் திணிக்க முயல்வது தீவிரவாதமாகும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று (20.03.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய சுதந்திரம் எனும் போர்வையில் ஒரு சமய நம்பிக்கையை பலவந்தமாகவோ, மறைமுகமாகவோ எந்த வடிவிலும் மாற்று சமயத்தவரிடையே திணிக்க முனைவது தீவிரவாதமாகும்.
அதற்கு உடந்தையாக இருப்பதையும், சமயங்களுக்கிடையில் சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் தோற்றுவிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எதிரான மாற்று செயற்பாடானது சமய அறம் சார்ந்ததாகவே இருக்க வேண்டுமே தவிர தீவிரம் சார்ந்து அமையக்கூடாது. அதற்கு எதிரான செயல்பாடு தாம் பற்றுவைத்துள்ள சமயம் கூறும் அன்புக்கும் அறத்திற்கும் எதிரானது என்பதே உண்மை.
பைபிள்கள் வழங்கி வைப்பு
நிறுவனத் திருச்சபை சாராத "கிடியன்ஸ்" எனும் சுதந்திர கிறிஸ்தவ அமைப்பு வடமாகாண பாடசாலை பிள்ளைகளுக்கு கிறிஸ்தவர்களின் திருமறையான பைபிளை கொடுக்க முயற்சித்தமையை எந்த அளவிற்கு அங்கீகரிக்க முடியாதோ அதே அளவிற்கு வடமாகாண கல்வி அதிகாரியின் செயற்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை சமய தீவிரவாதம் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றுமே அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

வட மாகாணத்தை மையப்படுத்திய நிறுவன திருச்சபைகளும், அமைப்புகளும், சுயாதீன கிறிஸ்தவ சபைகளும் இயங்கிக் கொண்டிருக்கையில் அவர்களை எல்லாம் தவிர்த்து விட்டு பாடசாலைக்கு கூட பிள்ளைகளுக்கு பைபில் கொடுக்க தீவிரம் காட்டியது ஏன்?
இந்நிலையில் தீவிர எதிர்ப்பு எழுந்ததும் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு மட்டுமே பைபிளை கொடுக்க தீர்மானித்த விடயத்திலும் அதனை பாடசாலைக்குள் செய்ய வேண்டாம் எனவும் உரிய தரப்பிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டுடன் தேசம் தேசியம் சார்ந்த அரசியல் போராட்டத்தை இனப்படுகொலை மூலம் அழிக்க பேரினவாதம் முயற்சித்த போதும் அது தோல்வி கண்ட நிலையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் சமூகம் ( சாதீய..) பிளவுகளை தோற்றுவிக்க எம்மவர்களையே பாவிப்பவர்கள் சமயங்களுக்கிடையிலும் மோதலை உருவாக்க திட்டம் தீட்டுவதை நாம் அறிவோம்.
முள்ளிவாய்க்கால்
இதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரசியல் அறம் தமிழர்களுக்கு எதிரானதாக தீவிரம் பெற்றிருக்கையில் அதற்கு எதிரான அரசியல் போராட்டம் பலமடைய வேண்டிய காலகட்டத்தில் சமய தீவிரவாதம் வளர்வது என்பது எமது அரசில் போராட்டத்தை அரசியல் முள்ளிவாய்க்கால் நோக்கியே தள்ளிச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோம்.

அனைத்து சமய கட்டமைப்புகளும் தமது சுயம் கருதிய எல்லைகளைக் கடந்து மானிட விடுதலை சார்ந்த அரசியல் நோக்கிய சமய கலந்துரையாடல்களை தமிழர் தாயகத்தில் விரிவு படுத்துதல் வேண்டும்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலமாக எமக்கிடையே பிளவினை உருவாக்கும், உருவாக்கத்துடிக்கும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அதற்கு எதிராக கூட்டாக குரல் கொடுக்கவும்.
சமூக தலைமைகளையும் அரசியல் தலைமைகளையும் அரசியல் அறநெறியில் பயணிக்க துணை நின்று கௌரவமிக்க அரசியல் தீர்வை அடைய கூட்டாக செயல்படுவதற்கான உந்து சக்தியாகவும் அமைய முடியும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.