சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை பரிந்துரைக்குக: இந்தியாவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
"ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்."என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடு மட்டுமல்லாது, அது நமது சக்தி வாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.
இந்தியாவின் உதவியை வலியுறுத்தல்
பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், இலங்கை உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.
தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.
நாற்பது ஆண்டுகளுக்கு பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983இல் நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.
ஐ.நாவில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.
தமிழின படுகொலை
இலங்கை ஆயுதத் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்கு தேவை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது.
எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவல நிலையை பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.
நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம்.
உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதில் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பது போன்று, இலங்கை பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரைவுத் தீர்மானத்தில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கும் பரிந்துரையை உள்ளடக்கியிருக்கவில்லை.
மேலும், இந்த பரிந்துரையை அனைத்து முந்தைய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஒன்பது முன்னாள் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்களும் பரிந்துரைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கைகளை எழுதியுள்ளனர். அத்துடன் இவர்கள் இலங்கை தொடர்பான ஐ.நாவின் நிபுணர்கள் ஆவார்.
நாம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கம், தமிழ் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைப்பதன் முக்கியத்துவம் குறித்து நாடுகளின் முக்கிய குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.
ஆனால், எங்களது கோரிக்கைகள், நமது தொடரும் அவல நிலையை பற்றிய புரிந்துணர்வும் அனுபவமும் இல்லாத மைய நாடுகளின் குழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடு
எமது கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் தாயகத்தில் பெருமளவில் ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவத்தினர் பொறுப்புக்கூறல் தொடர்பான அச்சம் இன்றி தமிழர்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களை எந்த தயக்கமுமின்றி தொடர்வதற்கு துணிந்துவிடும் என்று நாங்கள் தீவிரமாகக் கவலைப்படுகின்றோம்.
தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இதே இராணுவத்தினரே ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததுடன், நூற்றுக்கணக்கான தமிழ் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
தமிழ் இனத்தை சேர்ந்த நாம் தமிழர் என்ற காரணத்துக்காகவே பெரும் விலை கொடுத்துள்ளோம். உதாரணமாக, இலங்கை தொடர்பான ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீரமானம்
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017 இல், தமிழ் பெண்கள் பாலியல் அடிமைகளாக அடைக்கப்பட்டு சித்திரவதைபடுத்திய இலங்கை இராணுவக் கற்பழிப்பு முகாம்கள் பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த முக்கியமான நேரத்தில், ஐ.நா. மன்றத்தில் உதவுமாறு இந்தியாவை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வலியுறுத்தி நிற்கின்றோம்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
