நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்..! இலக்கு வைக்கப்பட்ட முக்கிய இடங்கள்
அமெரிக்கா நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய விமான நிலையம், தொடருந்து சந்திப்பு நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் இலக்காகத் தாக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரான்ஷஹர் விமான நிலையம் அருகே மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று விமான நிலையத்தைத் தாக்கியதாகவும் அரச தொலைக்காட்சி IRIB தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
அதேபோல், துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரின் முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமும் அமெரிக்க தாக்குதலுக்கு இலக்கானதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ஈரானியர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹோர்முஸ்கான் மாகாணத்தில், உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள இரண்டு பாலங்கள் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அரசின் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.