மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை - க.கருணாகரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையெனவும் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் பொருட்களைப் பதுக்கி வைத்துள்ள வர்த்தகர்களைக் கண்டறியும் வகையிலான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரனின் வழிகாட்டலில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணனின் தலைமையில் பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள், அரிசி ஆலைகள் உட்பட பல்வேறு விற்பனை நிலையங்கள் இன்று சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது அதிகளவான பொருட்களைப் பதுக்கி வைத்த விற்பனையாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன், அத்தியாவசிய பொருட்களைப் பதுக்கிவைத்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் பாவனையாளர் அலுவலக அதிகார சபைக்கான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் யாராவது பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிந்தால் பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.
நாளைய தினம் மட்டக்களப்பில் சதோச விற்பனை நிலையம் கள்ளியங்காட்டில் திறந்து வைக்கப்பட்டு அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






