புதிய அரசமைப்புக்கு முன்னுரிமை இல்லை: நளிந்த ஜயதிஸ்ஸ பகிரங்கம்
புதிய அரசமைப்புப் பணிகளை விட பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசு முன்னுரிமையளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய(05.02.2025) ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“புதிய அரசமைப்பைக் கொண்டுவர வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஆனால், தற்போது அதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அரசு நியமிக்கப்பட்டு குறுகிய காலமே கடந்துள்ளது.
பொருளாதார ஸ்திர நிலைமை
நாட்டில் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் பொருளாதார சவாலாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான முழு அரசும் அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான பணிகளிலேயே ஈடுபட்டுள்ளது.
அதற்கு இன்னும் காலம் செல்லும். இதன்போது ஏற்படக் கூடிய வழமையான பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றையும் முகாமைத்துவம் செய்து வருகின்றோம். பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைமையை அடைந்ததையடுத்து, புதிய அரசமைப்புப் பணிகளை முன்னெடுப்போம்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு
அந்தப் பணிகளையும் நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்ல மாட்டோம். குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
அதற்கமைய நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பொருத்தமான அரசமைப்பொன்றை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அனைத்தையும் ஒன்றுடனொன்று பிணைத்துக் கொண்டு அவற்றை வீணடிப்பதற்கு நாம் தயாராக இல்லை.
எனினும், பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கே நாம் முன்னுரிமையளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |