பொருளாதார பின்னடைவுக்கு காரணமான இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கவில்லை: கோவிந்தன் கருணாகரம்
நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லையெனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
'' 'கோட்டா கோ கோம்' போராட்டத்தினை வழிநடத்துகின்றவர்களோ, புதிய அரசாங்கத்தினை அமைக்கவுள்ளவர்களோ, ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளோ பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்ற போதிலும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லை.
2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் இதே ரணிலைப் பாதுகாத்தார்கள். மீண்டும் அவ்வாறான நிலைக்குச் செல்வார்கள் என்று கருதவில்லை.
தமிழ் தலைமைகள் பல தடவைகள் சூடு கண்டும் மீண்டும் மீண்டும் அடுப்பங்கரைக்குச்
சென்றுள்ளனர். மீண்டும் அவர்கள் செல்வார்களானால் இன்று 'கோட்டா கோ கோம்' போராட்டத்தினை முன்னெடுப்பது போன்று எங்களுக்கு எதிராக கோ கோம் என்னும்
கூச்சலிடுவதற்குச் சந்தர்ப்பத்தை நாங்கள் வழங்கக்கூடாது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.