கோட்டாகோகம வன்முறை விசாரணை, தேசபந்து தென்னக்கோன் தலைமையிலா..! ஜேவிபியின் கேள்வி
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகியவற்றுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை விசாரணை செய்த தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடத்தப்படுவதில் பயனில்லை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மே 9 அன்று அலரிமாளிகைக்கு வெளியேயும் "கோட்டகோகமாவில்" அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சுமார் 230 பேரை பொலிஸார் கைது செய்திருந்த போதிலும், அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் இதுவரை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சியடைவார்கள்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே தாக்குதலுக்கு காரணமானவர்கள் உட்பட அனைவரையும் நியாயமான விசாரணை நடத்தி கைது செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் வேண்டுமென்றே வன்முறைக் குழுக்கள் காலிமுகத்திடலில் நுழைய அனுமதிக்கப்பட்டன என்றும் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.