எரிவாயுவுமில்லை: வாகன வாடகையும் இழக்கிறோம்! மக்கள் விசனம்(Photos)
எரிவாயு கொள்வனவுக்காக வாடகைக்கு வாகனம் பிடித்துச் சென்றால் எரிவாயுவும் இல்லை, வாகன வாடகையால் பணமுமில்லாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதனால் மக்கள் அன்றாடம் எரிவாயு நிரப்பு நிலையங்களில் கூடுவதும், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வீடு செல்வதும் வாடிக்கையான ஒரு நிகழ்வாகியுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் யாழில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு, எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்குச் சென்ற மக்கள் எரிவாயு தீர்ந்து போனமையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு வந்த மக்கள் தெரிவிக்கையில்,
''நாங்கள் பலதடவைகள் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்காக இங்கு வந்து திரும்பிச் சென்றுள்ளோம். பல வேலைச் சுமைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் இங்கு வருகின்றோம். ஆனாலும் எங்களால் எரிவாயுவைக் கொள்வனவு செய்யமுடிவதில்லை.
டோக்கன் அடிப்படையிலேயே 100 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுகின்றது. ஆகையால் எங்களால் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. முச்சக்கரவண்டி போன்ற வேறு வாகனங்களை வாடகைக்குப் பிடித்து அதிலேயே எரிவாயு கொள்வனவு செய்ய வருகின்றோம். ஆனால் எரிவாயு கிடைப்பதில்லை.
அத்துடன் வாடகை வாகனத்துக்கான வாடகைப்பணம் கொடுக்க வேண்டும். இதனால் பணமும் வீணடைகிறது. குழந்தைகளை வீடுகளில் தனியாக விட்டு வரவேண்டிய சூழ்நிலைகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே உரியவர்கள் எமது நிலையைக் கருத்தில் கொண்டு இதற்கு விரைவில் நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

