முல்லைத்தீவில் பல இடங்களில் எரிபொருள் இல்லை! சில பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் (Photos)
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையே காணப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு எரிபொருள் நிலையங்களிலும் டீசல் வந்து இறங்குகின்ற அன்றைய தினமே அனைத்தும் முடிவடையும் நிலைமை தொடர்ந்து வருகின்றது.
மக்கள் வீடுகளில் பதுக்கி வைப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற நிலையிலும், தொடர்ச்சியாக ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகமான மக்கள் வரிசையில் நின்று எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு எரிபொருள் நிலையங்களில் எந்த ஒரு எரிபொருளும் இல்லாத நிலையில், எரிபொருள் இருக்கும் சில இடங்களில் அதிக மக்கள் கூடியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக மண்ணெண்ணெய் பெறுவதற்காகவும் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் குடும்ப
அட்டைகளுக்கு 500 ரூபாய் வீதம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



