நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எவரும் கைதுசெய்யப்படவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால
நடைமுறையில் உள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது அவர் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால, நிகழ்நிலை காப்புச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
நிகழ்நிலை காப்புச் சட்டம்
நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தேர்தல் காலத்தில் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாகவே செயற்படுவோம். நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும்.
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக ஊடகங்கள் மற்றும் சிவில் தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அமைச்சரவை பத்திரம் கடந்த மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து உப குழு ஒன்றை அமைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இறுதி வரைவினை இந்த மூன்று அமைச்சுக்களும் ஒன்றிணைந்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam
