நாட்டில் இளைஞர், யுவதிகள் உள்ளிட்டோருக்கு பொலிஸ் ஊடக பேச்சாளர் கடும் எச்சரிக்கை
நாட்டில் இணையத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர், யுவதிகள் உள்ளிட்டோருக்கு இலங்கையின் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான காணொளிகளை வைத்திருத்தல், இணையத்தளங்களில் பகிர்தல் மற்றும் பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலாங்கொடை - பஹன்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் பதிவு செய்யப்பட்ட பாலியல் ரீதியிலான காணொளி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காணொளி தொடர்பில் பொலிஸ் கணினி பிரிவு, ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், இந்த காணொளியை பதிவேற்றம் செய்த இணையத்தளத்திலிருந்து அதனை அப்புறப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான காணொளிகளை வைத்திருத்தல், பகிர்தல் மற்றும் பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகள் இலங்கை சட்டக் கோவையில் தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
