கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்! இலங்கையை வலியுறுத்திய நியூசிலாந்து
பூரணமான கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு இலங்கையிடம், நியூசிலாந்து அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51ஆம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து பிரதிநிதிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையிலான போராட்டங்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை முழு அளவில் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அமைதியான அணுகுமுறைகள்
கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப் பகுதியில் பாரிய போராட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் அமைதியான அணுகுமுறைகளை பின்பற்றியிருந்தனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அண்மைக் காலமாக போராட்டக்காரர்கள் மீது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து கரிசனை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்டங்களை முன்னெடுக்கவும், கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நியூசிலாந்து பிரதிநிதி லுசி டுன்கன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள்
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேண்தகு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு பொறுப்பு கூறுல் மிகவும் அவசியமானது என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
வரலாற்று ரீதியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து உள்நாட்டு பொறுப்பு கூறல் பொறிமுறைமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என பரிந்துரை செய்துள்ளது.