மீண்டுமொரு தாக்குதல் தொடர்பில் வெளியாகும் செய்தியால் பேரதிர்ச்சி! அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று, இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து விதமான கெடுதிகளிலிருந்தும் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்தருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன், குறித்த செய்தி தொடர்பிலான உண்மை நிலை பற்றி அறியாத போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களைக் காட்டிக் கொண்டு, மக்களைப் பிழையான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய, இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் அமைப்புகளே ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஏனைய இஸ்லாமியப் பெயர் தாங்கிய பயங்கரவாத அமைப்புகளாகும்.
இவ்வாறான தீவிரவாத அமைப்புகள் விடயத்தில் விழிப்புடன் செயற்படவேண்டும். இந்த அமைப்புக்களின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பது ஆராயப்பட வேண்டிய அவசியமாகும்.
எனினும், இவை இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் என்பதே உலக வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.
கடந்த 2015 ஜூலை 23 ஆம் திகதி இந்த அமைப்புகள் முற்றிலும் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை என்ற பிரகடனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏனைய சமூக அமைப்புகளும் இணைந்து வெளியிட்டன.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் காயங்களுக்குள்ளாகியதுடன் இலங்கை நாட்டின் நிம்மதியும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதைச் சகலரும் அறிவார்கள்.
முஸ்லீம் சமூகம் இலங்கை நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து வந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அளவிலா பங்களிப்பை மூதாதையர்கள் வரலாறு நெடுகிலும் செய்து வந்துள்ளனர். அவ்வாறே நாட்டுக்குப் பிரயோசனமான வெளிநாட்டு உறவைக் கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.
தாய்நாட்டை அந்நியவர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்தபோதெல்லாம் அக்காலத்தில் நாட்டை ஆட்சி செய்த உள்நாட்டு அரசர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து வந்துள்ளனர். சுதந்திரத்தைப் பெற்று ஜனநாயகக் குடியரசாக இலங்கை தாய்நாடு மாறியதிலிருந்து முஸ்லீம் தலைவர்கள் மதங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவும் காத்திரமான முயற்சிகளைச் செய்துள்ளனர்.
முஸ்லிம் பெயர் தாங்கிய வழி தவறிய சிலரால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான இத்தாக்குதலைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கெதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சில தீய சக்திகளால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு, முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பும் சந்தேகமும் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் மூதாதையர்கள் இந்த நாட்டுக்குச் செய்த பாரிய பங்களிப்புக்கள் மறக்கடிக்கப்படும் நிலை உருவாகி வருவது கவலைக்குரிய விடயமாகும்.
சிலர் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் தீவிரமாகச் செயற்படுவது வருந்தத்தக்கதாகும். இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் தூண்டப்படாமல், கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டும் என்றும் ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.